கோலாலம்பூர், டிச 26 – உலக மக்களுக்குப், புவி வெப்பமயமாதலை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த மரம் நடுவோம் எனும் சிந்தனையை விதைக்க மோட்டார் சைக்கிளில் உலகை சுற்றி வருகிறார் மலாக்காவைச் சேர்ந்த 63 வயது கதிரவன் சுப்பராயன் என்பவர்.
தனது பயணத்தின் 30 ஆவது நாட்டை அடைந்துள்ள கதிரவன் ஓய்வுபெற்ற ஒரு பொறியிளாளர் ஆவர்.
தனது BMW R1200 GSA வகை மோட்டார் சைக்கிளுக்கு பரமேஸ்வரா என்று பெயர் வைத்துள்ள இவர், அதில் தனது பயணத்தை இவ்வாண்டு ஜனவரி மாதம் பத்து கேவ்லிருந்து தொடங்கியிருக்கின்றார்.
106 நாடுகளை சுற்றி வரும் எண்ணத்துடன் தொடங்கிய அவரின் பயணம் தற்போது வட அமெரிக்காவில் அமைந்துள்ள மெக்சிகோ நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
செல்லும் வழியில் பல சவால்களைக் கடந்தாலும், அவரின் முத்தாய்ப்பான வெப்பநிலையை கட்டுப்படுத்தும் எண்ணம், 30க்கும் மேற்பட்ட மரங்களை நடுவதற்கு ஊக்குவித்துள்ளது.
நாம் அனுபவிக்கின்ற இயற்கை வளங்களை நம் தலைமுறை மட்டும் அனுபவித்து விட்டு போகக் கூடாது, அடுத்து வரும் தலைமுறையும் அனுபவிக்கும் வகையில் பாதுகாத்துவிட்டுச் செல்வது நமது கடமை. அந்த உன்னத நோக்கத்தில் தான் செல்கின்ற ஊர்களில் மரம் நடும் இவரின் முயற்சி பாராட்டப்படக்கூடியது மட்டுமல்ல, நாமும் பின்பற்ற வேண்டிய ஒன்று.