பூச்சோங், ஜூன் 13 – சிலாங்கூர், பூச்சோங் தொழிற்பேட்டை பகுதியில் அமைந்துள்ள, ஆடம்பர கார்களை பழுது பார்க்கும் பட்டறை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், 13 வயதுக்கும் 17 வயதுக்கும் இடைப்பட்ட ஐந்து சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
ஈராண்டுகளுக்கு முன், சட்டவிரோதமாக நாட்டிற்குள் தருவிக்கப்பட்ட அவர்கள் அனைவரும், நாள் ஒன்றுக்கு வெறும் 45 ரிங்கிட் சம்பளத்தில், ஒன்பது மணி நேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக, புக்கிட் அமான் D3 துணை உதவி இயக்குனர் சீனியர் அசிஸ்டன் கமிஸ்னர் சோபியான் சந்தோங் (Soffian Santong) கூறியுள்ளார்.
கார்களை பழுது பார்ப்பது, சாயம் பூசுவது உட்பட வெளி வேலைகளை செய்ய அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே பட்டறையிலிருந்து, 22 மியன்மார் பணியாளர்களும் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
குடிநுழைவுச் சட்டத்தின் கீழ், விசாரணைகாக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை வேலைக்கு அமர்த்தியதாக நம்பப்படும், சம்பந்தப்பட்ட பட்டறையில் கணக்காய்வாளராக பணிப்புரியும் பெண் ஒருவர் உட்பட 41 வயதுக்கும் 46 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று உள்நாட்டவர்களும் கைதாகியுள்ளனர்.
சம்பந்தப்பட்ட பட்டறை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதனால், ஆட்கடத்தல் மற்றும் குடிநுழைவுச் சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.