ஜார்ஜ் டவுன், நவ 16 – இந்துக்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்திருப்பது குறிப்பாக B40 வசதிக் குறைந்த மக்களிடையே பெரிய அதிர்ச்சி அலையை ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட பூஜை பொருட்களின் விலை 56 விழுக்காடுவரை அதிகரித்திருப்பதாக பினாங்கு இந்து சங்கம் மற்றும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த விலை உயர்வு வசதியானவர்களை விட வருமானம் குறைந்த ஏழை மக்களிடையே அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அந்த இரு சங்கங்களும் கவலை தெரிவித்துள்ளன.
அண்மையில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளியை கொண்டாடிய இந்துக்கள் நவம்பர் 18ஆம் தேதிவரை கந்த சஷ்டி மற்றும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி தைப்பூசம் ஆகியவற்றுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிலைமையில் பூஜைப் பொருட்கள் விலை உயர்ந்திருப்பதை இந்துக்கள் சுமையாக கருதுகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விற்கப்பட்ட பூஜை பொருட்களின் விலையை ஒப்பிடுகையில் சூடம், மாலைகள், பன்னீர், சாம்பிராணி, அகர்பத்திகள், வெற்றிலை, பாக்கு, தேங்காய், அகல் விளக்கு, பூஜை எண்ணெய் ,சீயக்காய் மற்றும் போட்டலில் அடைக்கப்பட்ட பால் ஆகியவவையின் விலை 14-லிருந்து 56 விழுக்காடுவரை அதிகரித்திருப்பதை தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக பினாங்கு இந்து சங்கமும், பினாங்கு பயனீட்டாளர் சங்கமும் கூறியுள்ளன. உதாரணத்திற்கு ஒரு கிலோகிராமுக்கு 10 ரிங்கிட்டாக இருந்த பாக்கின் விலை 22 ரிங்கிட்டாக உயர்ந்துள்ளதை அவை சுட்டி காட்டியுள்ளன.
பூஜைப் பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த இரு அமைப்புகளும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.