![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-27-Jun-2024-09-25-AM-9370.jpg)
பெட்டாலிங் ஜெயா, ஜூன் 27 – கையில் பூக்களை பச்சை குத்துவதற்கு அதன் கடைக்கு சென்ற ஆடவர் ஒருவர் ஓரின புணர்ச்சியினால் பாதிக்கப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. 24 வயதுடைய இளைஞர் ஒருவர் பச்சை குத்தும் நிலையத்தை நடத்திவந்த ஆடவரால் இந்த வன்கொடுமைக்கு உள்ளாகியிருப்பதை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஷாருல்நிசாம் ஜபார் ( Sharulnizam Jaafar ) உறுதிப்படுத்தினார். தொடக்கத்தில் அந்த சந்தேகப் பேர்வழி அந்த இளைஞரின் கையில் பூக்களை பச்சை குத்தியுள்ளார். அவர் ஏதோ ஒரு எண்ணெயை தடவியதும் தாம் சுயநினைவை இழந்துவிட்டதாகவும் கண் விழித்தபோது தனது உடலில் உடை எதுவும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் பச்சை குத்தும் நிலையத்தில் நிகழ்ந்துள்ளது. உடலில் வலி ஏற்பட்டதை உணர்ந்து மலாயா பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெறச் செல்வதற்கு முன் அந்த இளைஞர் போலீசில் புகார் செய்துள்ளார். சந்தேகப் பேர்வழி இன்னும் கைது செய்யப்படவில்லை. எனினும் தண்டனை சட்டத்தின் 377 B விதியின் கீழ் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஷாருல்நிசாம் தெரிவித்தார்.