லுமுட், ஜனவரி 16 – பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ங்கே கூ ஹாமின் கார்களுக்கு எரியூட்டியது தொடர்பில், இம்மாதம் பத்தாம் தேதி கைதுச் செய்யப்பட்ட, 30 வயது மதிக்கத்தக்க ஆடவன் ஒருவரின் தடுப்புக் காவல், மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ், அவ்வாடவனுக்கு எதிரான தடுப்புக் காவலை, நாளை வரை நீட்டிக்க வேண்டும் எனும் கோரிக்கைக்கு, லுமுட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இம்மாதம் பத்தாம் தேதி கைதுச் செய்யப்பட்ட அவ்வாடவன், விசாரணைக்கு உதவும் பொருட்டு, இன்று வரை ஐந்து நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தான்.
தீயை கொண்டு சதிநாச செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக, குற்றவியல் சட்டத்தின் 435-வது பிரிவின் கீழ் அவனுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படும் வேளை ; குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், அபராதமும் விதிக்கப்படலாம்.
சிலாங்கூர், ஷா ஆலாமில் கைதுச் செய்யப்பட்ட அந்த ஆடவன் மீது ஸ்ரீ மஞ்சோங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.
முன்னதாக, “மொலோடோவ் காக்டெய்ல்” எரிபொருளை கொண்டு தாக்கப்பட்டதில், பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கூ ஹாமின், E300 ரக மெர்சிடிஸ் பென்ஸ் கார் உட்பட ஹோண்டா CRV மற்றும் தோயோதா ஹிலக்ஸ் ரக வாகனங்கள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.