கெரிக், நவம்பர் 27 – பேராக், கெரிக், ஜாலான் கெரிக் – ஜெல்லி சாலையில் விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பதற்றமான சூழலை எதிர்கொள்ள நேரிட்டது.
ஆறு யானைகள் அடங்கிய யானை கூட்டம் ஒன்று அவர்களை தாக்க முற்பட்டதே அதற்கு காரணம் ஆகும்.
நேற்று மாலை மணி 7.35 வாக்கில், பினாங்கிலிருந்து, திரங்கானு, ஜெர்த்தே நோக்கி, தனது புரோடுவா அக்சியா காரில் பயணித்த 48 வயது ஆடவர் ஒருவர், மழை மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக பார்க்கும் தூரம் குறைந்ததால், சாலை வளைவு ஒன்றில், யானை குட்டி ஒன்றை மோதி விபத்துக்குள்ளானார்.
அதனால், ஆவேசம் அடைந்த இதர யானைகள், அவ்வாடவரின் காரை நெருங்கி அதனை மிதித்து சேதப்படுத்தியதாக, கெரிக் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் ஜுல்கிப்லி முஹமட் தெரிவித்தார்.
அதனால், காரின் முன் – இடது பகுதிகள் உட்பட பூட்டும் சேதமடைந்தன.
எனினும், மோதித் தள்ளப்பட்ட யானை குட்டி எழுந்து அவ்விடத்தை விட்டு அகன்றதும், இதர யானைகளும் தாக்குதலை நிறுத்திக் கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தில் கார் ஓட்டுனருக்கும், அவருடன் பயணித்த இதர இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.
அதனால், ஜாலான் ராயா தீமோர் பாராட் சாலையை பயன்படுத்தும் வாகனமோட்டிகள், அவ்வப்போது சாலையை கடந்து செல்லும் வனவிலங்குகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பதால், மிகவும் கவனமாக பயணத்தை மேற்கொள்ளுமாறு போலீஸ் அறிவுறுத்தியுள்ளது.