ஈப்போ, டிச 2 – பேராக் , கம்போங் கபாயாங் ஸ்ரீ சிவ சுப்ரமணியர் ஆலயத்தின் ஐந்தாவது மஹா கும்பாபிஷேகம் நேற்று டிசம்பர் ஒன்றாம் திகதி சிறப்புடன் நடைபெற்றது.
இந்த ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரும் திரளாக கலந்துக் கொண்டனர். 127 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா இதற்கு முன்னதாக கடந்த 1918, 1928, 2000 மற்றும் 2013 ல் நடந்தாக ஆலயத் தலைவர் சுந்தரராசு தெரிவித்துள்ளார்.
ஈய பள்ளதாக்கில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் வந்து போகும் இடத்தில் 1896 ம் ஆண்டு இவ்வாலயம் தோற்றுவிக்கப்பட்டது.
அங்கிருந்த ஒரு சித்தர், இங்குள்ள புற்றில் முருகன் குடிகொண்டுள்ளதாக அங்கு வருவோரிடம் கூறி வந்த நிலையில் அந்த புற்றைத் தோண்டி பார்க்கும் போது முருக பெருமானின் வடிவமைப்பை கொண்ட கற்சிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு 1896 முதல் 1901 வரை ஆலய நிர்வாகத்தை அமைத்து இன்றுவரை இந்த ஆலயம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆலய வளாகத்தில் வீற்றிருக்கும் சிவபெருமான் சன்னதிக்கும் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்று பின்னர் குகையில் வீற்றிருக்கும் முருகப் பெருமானுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பேராக் மாநிலத்தில் மிக விமரிசையாக தைப்பூசம் நடைபெறும் இரண்டாவது ஆலயமாக விளங்கும் இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழாவைக்காண நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள குவிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.