ஈப்போ, டிச 14 – ஈப்போவில் குனோங் ரப்பாட்டில் தமிழ்பள்ளி இன்று அதிநவீன பள்ளியாக உருமாறியுள்ளது. அப்பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகளிலும் திறன் பலகை பொருத்தப்பட்டு கணினி அறை, அறிவியல் அறை, நூல் நிலையம், திடல் வசதி உட்பட பல வசதிகள் கொண்ட பள்ளியாக உருமாறி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுமார் 70 லட்சம் ரிங்கிட் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இப்பள்ளியில் இவ்வாண்டு மார்ச் மாதம் மாணவர்கள் புதிய கட்டடத்தில் தங்களது கல்வியை தொடங்கினர். இப்பள்ளியில் வகுப்பறைகளுக்கு திறன் பலகையை பொருத்திய நிறுவனத்திற்கு இன்று காசோலை ஒப்படைப்பு நிகழ்வு நடைபெற்றது.
மாணவர்களுக்கு சகல வசதியும் கொண்ட பள்ளியாக குனோங் ரப்பாட் தமிழ்ப்பள்ளி உருமாறியிருப்பது மகிழ்ச்சியை அளிப்பதாக அப்பள்ளியின் தலைமையாசிரியர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்தார்.
இப்பள்ளி சகல வசதிகள் கொண்ட பள்ளியாக உருமாற பள்ளி நிர்வாகம் , பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கொண்ட மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது என பள்ளி மேலாளர் வாரியக் குழுத் தலைவர் வழக்கறிஞர் எஸ். இளங்கோ தெரிவித்தார்.
பேராவில் அனைத்து வகுப்புகளிலும் கற்றல் கற்பித்தலை போதிக்க திறன் பலகை பொருத்தப்பட்ட முதல் பள்ளியாக விளங்குவதால் இப்பள்ளி எதிர்காலத்தில் சிறந்த பள்ளியாக விளங்கும் என அவர் கூறினார்.
தற்போது 128 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதற்கு பெற்றோர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்றும் இளங்கோ வலியுறுத்தினார்.