கோலாலம்பூர், டிச 6- உலகின் பல்வேறு பகுதிகளில் தற்போது நடைபெற்றுவரும் ஆயுத நெருக்கடியில் ஒரு பாவமும் அறியாத பொதுமக்களுக்கு எதிரான அனைத்து வன்செயல்களையும் மலேசியா நிராகரிப்பதாக மாட்சிமை தங்கிய பேரரசர் அல் -சுல்தான் அப்துல்லா தெரிவித்துள்ளார். மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளில் வெகுண்டுகளை வீசுவது, குடிநீர் மற்றும் மின் விநியோகத்தை பாதிக்கக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அவர் சுட்டிக்காட்டினார். இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடு என்ற முறையில் அனைத்துலக மனிதாபிமான பண்புகளுக்கு எதிரான வன்செயல்களை மறுப்பது நமது பொறுப்புணர்வாக இருக்க வேண்டும் என சுல்தான் அப்துல்லா கேட்டுக்கொண்டார்.
பாதுகாப்பு மற்றும் தற்காப்பு துறைகளுக்கான தலைவர்கள் உட்பட அனைவரும் அனைத்துலக அமைதி மற்றும் மனிதாபிமான கோட்பாடுகளை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார். இப்போதிலிருந்து இந்த கோட்பாடுகளை நாம் பின்பற்றாவிட்டால் எதிர்காலத்தில் எந்தவொரு தகராறுக்கும் தீர்வு காணமுடியாது என சுல்தான் அப்துல்லா தெரிவித்தார். இன்று உலக வர்த்தக மையத்தில் நடைபெற்ற மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றியபோது சுல்தான் அப்துல்லா இதனைத் தெரிவித்தார்.