கோலாலம்பூர், நவம்பர் 8 – கடந்த ஜூன் மாத வாக்கில் சமூக ஊடகங்களில் வைரலான, “இன்ஸ்பெக்டர் ஷீலா” என அழைக்கப்படும் ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமாருக்கு எதிராக, பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்ததாக அல்லது இடையூறை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், தமக்கு எதிரான அந்த குற்றச்சாட்டை மறுத்து ஷீலா விசாரணை கோரியதை தொடர்ந்து, 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், தனிநபர் உத்தரவாதத்தின் பேரிலும் இன்று அவரை நீதிமன்றம் விடுவித்தது.
இவ்வழக்கு விசாரணை, டிசம்பர் 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.
முன்னதாக, 35 வயது ஷீலா, ஜூன் 15-ஆம் தேதி, மாலை மணி 5.26 வாக்கில், பிரிக்பீல்ட்சிலுள்ள, பேரங்காடி ஒன்றின் கார்நிறுத்துமிடத்தில், கோபத்தில் தனது காரின் ஹார்னை நீண்ட நேரம் ஒலிக்கச் செய்ததோடு, பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் கத்தி சத்தம் போட்டதாகவும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றம் நிரூப்பிக்கப்பட்டால், அவருக்கு 400 ரிங்கிட் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்.
அதே சமயம், லான்ஸ் கோபரல் பதவி வகிக்கும் சக போலீஸ் படை வீரரை சிறுமைப்படுத்தியது, இரு பெண்களை அச்சுறுத்தியது என இதர மூன்று குற்றச்சாட்டுகளையும் ஷீலா எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.