கோலாலம்பூர், ஜனவரி 10 – பொருள் விநியோகிப்பாளர் ஒருவரை அடித்து காயம் விளைவித்த காணொளி வைரலானதை தொடர்ந்து பிரபலமான “சிவப்பு அங்கி’ ஆடவனுக்கு, ஈராயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
28 வயது முஹமட் நஸ்ருல் ஹைரி ஹர்மி எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவன் நான்கு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடலாம்.
கடந்தாண்டு, நவம்பர் இரண்டாம் தேதி, மாலை மணி 3.59 வாக்கில், தலைநகர், ஜாலான் துன் ரசாக்கிலுள்ள, TRX IQ கோபுர வளாகத்தில், 24 வயது முஹமட் சமீரை அடித்து காயப்படுத்தியதாக, அவன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்தான்.
முன்னதாக, பொருள் விநியோகிப்பாளர் ஒருவருக்கும், வர்த்தக வளாகத்தில் இருந்த சில நபர்களுக்கும் இடையில் மூண்ட அந்த சண்டை தொடர்பான விசாரணை அறிக்கை முழுமையடைந்து விட்டதாக, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுடின் அப்துல் மாஜிட் கூறியிருந்ததாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.