கோலாலம்பூர், ஜன 8 – டிசம்பர் மாதம் லாவோசில் போதைப் பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்ட மலேசிய ஆடவரை இங்கு கொண்டுவரும் திட்டம் எதுவும் புக்கிட் அமானுக்கு கிடையாது என போலீஸ் படை துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்திருக்கிறார். அந்த நபர் தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். பேராக்கை சேர்ந்த அந்த 41 வயதுடைய நபருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தாய்லாந்தை பொறுத்ததாகும் என அவர் கூறினார். தாய்லாந்து பெண்ணை மணந்துள்ள அந்த ஆடவர் போதைப் பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தாய்லாந்திலேயே எதிர்நோக்கட்டும் என புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் தெரிவித்தார். போதுமான ஆதாரங்கள் இருந்தால் தாய்லாந்து அரசாங்கம் அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டலாம் என்று அவர் கூறினார்.