கோலாலம்பூர் , பிப் 14 – போலீஸ்காரராக நடித்ததோடு 3 வங்காளதேசிகளை 50,000 ரிங்கிட் பிணைப்பணத்திற்காக கடத்திய குற்றத்திற்காக வேலையில்லாத ஆடவருக்கு 30 ஆண்டு சிறைத் தண்டனையும் 10 பிரம்படியையும் விதிப்பதாக கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மூவர் கொண்ட நீதிபதிகள் குழுவுக்கு தலைமையேற்ற மேல் முறையீட்டு நீதிமன்ற தலைவர் அபாங் இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் இந்த தீர்ப்பை வழங்கினார். 47 வயதுடைய சுஹைமி அலியாசிற்கு எதிரான ஆயுள் தண்டனை ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக 30 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படி விதிக்கப்படுவதோடு அவரது மேல் முறையிடு நிராகரிக்கப்படுவதாக நீதிபதி இஸ்கண்டார் அபாங் ஹாஷிம் தீர்ப்பளித்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 16ஆம்தேதி விடியற்காலை 4 மணியளவில் கிள்ளான் , ஜாலான் மேருவில் 50 ,000 ரிங்கிட் பிணைப்பணத்திற்காக கோலம் ஃபரூக், முகமட் ரபிக் மற்றும் சோஜிப் ஆகியோரை கடத்தியதாக சுஹைமி அலியாஸ் மற்றும் இதர இருவர் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவாளி என நிருபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படும் 1961ஆம் ஆண்டின் கடத்தல் சட்டத்தின் 1ஆவது பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 34 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றத்திற்காக உயர்நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை மற்றும் 10 பிரம்படியை இதற்கு முன் மேல்முறையீட்டு நீதிமன்றம் நிலைநிறுத்தியது. அந்த தீர்ப்பை எதிர்த்து சுஹைமி அலியாஸ் கூட்டரசு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.