பாங்கி , நவ 22 – குற்றச் செயல் எதிர்ப்பு நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட 2.4 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள மதுபானங்கள், பல்வேறு கணினி சாதனங்கள் , சிகெரெட்டுகள், கை தொலைபேசிகள் பிட் கொய்ன்கள் மற்றும் சூதாட்ட இயந்திரங்கள் , ஏ.டி.எம் பணப் பட்டுவாடா அட்டைகள் அழிக்கப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தொடர்பான வழக்குகள் முடிவுற்றதை தொடர்ந்து அது தொடர்பான குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமட் சாயிட் ஹாசன் தெரிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கு ஏற்பட இந்த பொருட்கள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கி இவ்வாண்டு வரையிலான குற்றச்செயல் துடைத்தொழிப்பு நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட வரி செலுத்தப்பட்ட மதுபானங்கள், சிகரெட்டுக்களும் பாங்கி போலீஸ் நிலையத்தில் அழிக்கப்பட்டதாக முகமட் சாயிட் கூறினார். அதோடு கோரப்படாமல் இருந்த 9 வாகனங்களும் ஏலமிடப்பட்டன. 193 கோப்புகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் விசாரணைப் பிரிவு வழக்குகள் மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையின் 24 குற்றச்செயல்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டதைத் தொடர்ந்து அந்த குற்றச்செயல்கள் தொடர்பான அனைத்து உபகரணப் பொருட்களும் அழிக்கப்பட்டதாக முகமட் சாயிட் தெரிவித்தார்.