கோலாலம்பூர், ஜன 17 – பொதுமக்கள் புகார் தெரிவிக்க முந்வந்தால் அதனை நிராகரிக்கும் அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் எச்சரித்திருக்கிறார். கோலாலம்பூர் மாநகரில் உள்ள ஆறு போலீஸ் மாவட்டங்கள் மற்றும் 26 போலீஸ் நிலையங்களை சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் போலீஸ் புகார் அளிக்க யார் வந்தாலும் அதனை
நிராகரிக்கக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். போலீஸ் புகார் செய்வதற்காக அதற்கான பொறுப்பை ஒப்படைக்கப்பட்டவர்கள் அந்த பொறுப்பையும் கடப்பாட்டையும் நிறைவேற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும் என அலாவுதீன் கேட்டுக்கொண்டார்.
நான்கு போலீஸ்காரர்களால் மிரட்டலுக்கு உள்ளான ஒருவரிடமிருந்து போலீஸ் புகாரை எடுத்துக்கொள்வதற்கு பல்வேறு போலீஸ்காரர்கள் மறுத்தது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார். போலீஸ் புகார் கொடுப்பதற்கு யார் முன்வந்தாலும் அதனை நிராகரிக்கக்கூடாது என தாம் பல முறை கூறியிருப்பதால் அந்த ஆடவரை மிரட்டிய போலீஸ்காரர்கள் குறித்து புகாரை எடுக்க மறுத்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அலாவுதீன் தெரிவித்தார்.