ஈப்போ, மார்ச் 11 – ஈப்போ, மஞ்சோயில் உள்ள மைடின் பேரங்காடியின் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயால், வாடிக்கையாளர்கள் பதற்றத்தில் கட்டடத்தை காலி செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாகினர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை 6.45 மணியளவில் திடீரென மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டு, தீ எச்சரிக்கை ஒலி அலறியிருக்கிறது.
அப்போது பேரங்காடிக்குள் 40 பணியாளர்களும் 200-கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களும் இருந்தனர்.
தீ பரவும் முன்பாக அவர்கள் அனைவரும் இடத்தை காலி செய்து விட்டு பாதுகாப்பாக வெளியேறினர்.
அந்த இரண்டாவது மாடியில் துணிமணிகள், மின்சாரப் பொருட்கள், அன்றாட வீட்டுப் பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டிருந்தன.
கூரையில் ஏற்பட்ட தீ பின்னர் அதிவேகத்தில் கட்டடத்திற்குள் பரவியிருக்கிறது.
தீயை அணைக்கும் பணியில், தீயணைப்புக் குழு, போலீஸ், ரேலா தொண்டூழியப் படை, பொதுத் தற்காப்புப் படை APM என 123 பேர் பலம் கொண்ட குழு ஈடுபட்டதாக பேராக் தீயணைப்பு மீட்புத் துறை இயங்குநர் சயானி சைடோன் கூறினார்.
நள்ளிரவுக்குள் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது; அதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அருகில் உள்ள குடியிருப்புப் பகுதியில் வீடுகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மொத்த பொருட்சேதம் மதிப்பிடப்பட்டு வருகிறது.