கோலாலம்பூர், டிச 19 – மியான்மாரில் மனிதக் கடத்தல் கும்பலிடம் இன்னமும் 300க்கும் மேற்பட்ட மலேசியர்கள் சிக்கியிருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
மியன்மார் அரசாங்கம் மற்றும் கிளிர்ச்சிக்காரர்களுக்கு இடையிலான உள்நாட்டுச் சண்டை காரணமாக, கடத்தல் கும்பல் தங்களது நடவடிக்கையை வேறோர் இடத்திற்கு இப்போது மாற்ற முற்படுவதாக மலேசியாவின் அனைத்துலக மனித உரிமை அமைப்பின் அஸிருல் சியாபிக் சசாலி கூறியுள்ளார்.
இதில் மலேசியர்களே அதிகம் கடத்தப்படும் நிலையில், சீனாவின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ள டோன்ஃபியுங் மாவட்டத்தில் அவர்கள் கடத்திச் செல்லப்படுவதாகவும் அஸிருல் தெரிவித்தார்.
மியன்மாரில் உள்ள நடவடிக்கை மையங்களை இந்த மனிதக் கடத்தல் கும்பல்கள் மூடச்செய்யும் அளவுக்கு இந்த விவகாரம் அந்நாட்டில் பூதாகரமாக உருவெடுத்துள்ளது.
இதனிடையே இந்த மோசடி-மனிதக் கடத்தல் கும்பலிடமிருந்து 100க்கும் மேற்பட்ட மலேசியர்கள் லவுக்காயிங் மாவட்டத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அதோடு இந்தக் கும்பல்களைச் சேர்ந்த பலரும் கைது செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.