புத்ரா ஜெயா, நவ 30 – ஏழு ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக முன்னாள் லோரி ஓட்டுனரான சத்வேந்தர் சிங்கிற்கு மேல் முறையீடு நீதிமன்றம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. D. கமல்ஜிட் என்ற தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டு, மரணத்தை ஏற்படுத்தியதாக திருத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து அவருக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக மூவர் கொண்ட விசாரணைக் குழுவுக்கு தலைமையேற்ற நீதிபதி வசீர் அலாம் மைடின் மீரா தெரிவித்தார். நீதிபதி அஹ்மாட் ஸாய்டி இப்ராஹிம் மற்றும் நீதிபதி எஸ்.கோமதி ஆகியோரும் இந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த இதர இரண்டு நீதிபதிகளாவர்.
தொடக்கத்தில் கமல்ஜிட் மற்றும் அவரது ஏழு மாத குழந்தையையும் கொலை செய்ததாக சத்வேந்தர் சிங் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் அந்த குழந்தையின் தொண்டையில் பால் சிக்கிக்கொண்டிருக்கலாம் என மருத்துவ பரிசேதானையில் தெரியவந்தால் அந்த குற்றச்சாட்டு மீட்டுக்கொள்ளப்பட்டது. தனது மனைவிக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து தண்டனையை அனுபவிக்கும்படி சத்வேந்தர் சிங் கிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.