மூவார், பிப்ரவரி 15 – ஜொகூரில் போதைப் பொருள் வழக்கில் சிறைவாசம் முடித்து அண்மையில்தான் வெளியானவரான 44 வயது ஆடவர், மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்டு அவரின் கழுத்தை நெருக்கியதன் பேரில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான சின் தோங் சோய் எனப்படும் அந்நபர் மீது, கடந்த வாரம் வேண்டுமென்றே 42 வயது தனது மனைவிக்கு காயம் விளைவித்தது உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகள் மூவார் மெஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டன. அவர் மீதான மற்றொரு குற்றச்சாட்டு, போதைப் பொருள் உட்கொண்டதாகும். அவ்விரண்டு குற்றங்களையும் ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு 17 மாதங்கள் சிறைத் தண்டனை விதிப்பதாக மஜிஸ்திரேட் ஃபாத்தின் டாலிலா காலிட் அறிவித்தார். மனைவிக்கு காயம் விளைவித்த குற்றத்திற்காக 11 மாத சிறையும், இரண்டாவது குற்றத்திற்கு 6 மாத சிறையுடன் ஈராண்டுகள் போலிஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், இரண்டு குற்றச்சாட்டுகளுக்குமான தண்டனையை அவர் கைதான நாளில் இருந்து ஏக காலத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி அறிவித்ததால், தோங் சோய் 11 மாதங்கள் மட்டுமே சிறையில் இருக்க வேண்டி வரும்.