கோலாலம்பூர், பிப் 3 – தண்டனை முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தேர்தலில் போட்டியிடவோ அல்லது அரசுப் பதவியில் இருக்கவோ முடியாது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு முழு மன்னிப்பு வழங்கப்படாததால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என மூத்த வழக்கறிஞர் டத்தோ டாக்டர் பல்ஜிட் சிங் சித்து தெரிவித்திருக்கிறார்.
நஜிப்பின் தண்டனை முடிந்த பிறகு ஐந்தாண்டு தகுதி நீக்கம் தொடங்குகிறது.
என மூத்த வழக்கறிஞர் முகமட் ஹனிஃப் காத்ரி கூறியுள்ளார். கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 48 வது பிரிவின் கீழ் இது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் நிற்பது தொடர்பான அந்த தகுதியிழப்பு கூட்டரசு அரசிலமைப்பு சட்டத்தின் 48-ஆவது உட்பிரிவு 3-இன் கீழ் மாமன்னரால் தள்ளுபடி செய்யப்படலாம். அதனால்தான் இது இலவச மன்னிப்பு என்று அழைக்கப்படுகிறது முகமட் ஹனிஃப் காத்ரி சுட்டிக்காட்டினார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 48-ஆவது பிரிவின் கீழ் ஒரு ஆண்டிற்கு மேல் சிறைத்தண்டனை அல்லது 2,000 ரிங்கிட்டிற்கு மேல் அபராதம் விதிக்கப்படும் மற்றும் மன்னிப்பைப் பெறாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட நபர்கள் ஐந்தாண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள் ஆவர்.
இருப்பினும், நஜிப்புக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு இலவச மன்னிப்பைக் கொண்டிருக்கவில்லை என்று முகமட் ஹனிஃப் காத்ரி தெரிவித்தார். 2018-இல் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரச மன்னிப்பை உதாரணமாகக் குறிப்பிட்டு, நஜிப்பைப் போலல்லாமல், அன்வாருக்கு இலவச அல்லது முழு மன்னிப்பு வழங்கப்பட்டது என்று அவர் கூறினார். அடுத்த பொதுத் தேர்தல் 2027-ஆம் ஆண்டுக்குள் நடத்தப்பட வேண்டும்.