குவாந்தான், மார்ச் 23 – ரமலான் சந்தையில் உணவுகளின் மிச்சம் மீதி குப்பைத் தொட்டிக்குள் போகாமல் தடுத்து, அவற்றை இயற்கை உரம் தயாரிக்கப் பயன்படுத்தும் சீரிய முயற்சி குவாந்தானில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மறுசுழற்சி நிறுவனமான SWCorp முயற்சியில் Kompos@Bazar எனும் திட்டத்தின் கீழ் Mahkota Square சதுக்கத்தில் உள்ள ரமலான் சந்தையில் தான் அதற்கென தனி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
மறுசுழற்சியை ஊக்குவிக்கும் நோக்கிலான அத்திட்டம் பொது மக்கள் குறிப்பாக ரமலான் சந்தைக்கு வருவோரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவும் பயன்படுகிறது.
அவ்வகையில், இவ்வாண்டு ரமலான் மாதத்தின் முதல் 10 நாட்களில் அங்கு வீசப்பட்ட 286 கிலோ கிராம் உணவுக் கழிவுகளும், இயற்கை முறையில் உரமாக்கப்பட்டு, 180.5 கிலோ கிராம் உரம் உற்பத்தியாகியிருக்கிறது.
அந்த 286 கிலோ உணவுக் கழிவுகளும் அங்குள்ள குவாந்தான் நகராண்மைக் கழகத் திடலில் நோன்புத் துறந்தவர்கள் வீசிச் சென்றவை என பஹாங் SWCorp மறுசுழற்சி நிறுவனத்தின் இயக்குநர் ஷருடின் ஹமிட் சொன்னார்.
கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் 169 கிலோ கிராம் கழிவுப் பொருட்கள் வாயிலாக 50 கிலோ உரம் உற்பத்தியானதாக அவர் கூறினார்.
அங்கு உற்பத்தியாகும் உரத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள சமூக விவசாய நிலங்களில் பயிர்களின் செறிவூட்டலுக்காக விநியோகம் செய்ய முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.