மலாக்கா, பிப்ரவரி 2 – மலாக்கா, ஜாலான் ஹாங் துவாவிலுள்ள, மாமாக் உணவகம் ஒன்றை இரண்டு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
அசுத்தமான சூழலில் இயங்கியதால் மாநில சுகாதார துறை அந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் செய்த புகாரை தொடர்ந்து, நேற்று மாலை அந்த உணவகத்தில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்ட வேளை ; 14 நாட்களுக்கு அதனை மூட உத்தரவிடப்பட்டதாக, மலாக்கா மாநில சுகாதார துறையின் உணவு தரக்கட்டுப்பாட்டு பாதுகாப்பு துறையின் துணை இயக்குனர் டோரதி தயங் ஹென்றி சம் தெரிவித்தார்.
குறிப்பாக, உணவகத்திற்கு பின்னால் உள்ள சாக்கடையில், பணியாளர் ஒருவர் சிறுநீர் கழிக்கும் 21 வினாடி காணொளி ஒன்று வைரலானதை அடுத்து, அந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
அந்த சோதனையில் பல்வேறு குற்றங்கள் அல்லது விதிமீறல்களுக்காக உணவக உரிமையாளருக்கு ஆயிரத்து 500 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.
2022-ஆம் ஆண்டு, இதே போல சம்பந்தப்பட்ட உணவகத்தை மூட இருமுறை உத்தரவு பிறபிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.