மலாக்கா, ஜனவரி 31 – தனக்கு சொந்தமான கைப்பேசியில் ஆபாச படம் பார்த்த 13 வயது மகன் மீது வெந்நீர் ஊற்றிய, ஐந்து பிள்ளைகளின் தாயான பெண் ஒருவருக்கு, மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
38 வயதான அப்பெண் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
ஈராண்டுகளுக்கு முன், அப்பொழுது 13 வயதே ஆன தனது மகன் மீது அப்பெண் வேண்டுமென்றே சுடுநீரை ஊற்றியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
2022-ஆம் ஆண்டு, ஜூன் 27-ஆம் தேதி, பிற்பகல் மணி 2.56 வாக்கில், சுங்கை ஊடாங்கிலுள்ள, அரசாங்க பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதியிலுள்ள, வீடொன்றில் அப்பெண் அக்குற்றத்தை புரிந்துள்ளார்.
தனது கைப்பேசியின், இணையத் தரவை, ஆபாசப் படம் பார்க்க மகன் செலவிட்டதால் சினமடைந்த அப்பெண் அவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்துக்கு பின்னர் பள்ளி சென்ற அச்சிறுவனின் சட்டையில் படிந்திருந்த இரத்தக் கரையை கண்ட மற்றொரு சிறுவன் அது குறித்து தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் செய்த போலீஸ் புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட பெண் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.