மலாக்கா, டிசம்பர் 27 – மலக்கா தெங்ஙாவிலுள்ள, “முவாலாவ்” முஸ்லீம் மதத்தை தழுவிய ஆண்கள் தங்கும் விடுதியில், ஆறாம் ஆண்டு மாணவன், தனது அறையில் தங்கி இருந்த 20 வயது ஆடவன் ஒருவனால், 30 முறை இயற்கைக்கு புறம்பான பாலியல் வன்கொடுமைக்கு இலக்காகியுள்ளார்.
தங்கும் விடுதி அறையில் உறங்கிக் கொண்டிருக்கும் போதும், கழிவறைக்கு செல்லும் போதும், அச்சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு இலக்கானதாக, மலாக்கா போலீஸ் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.
எனினும், கடந்த ஞாயிற்றுகிழமை, அவ்வாடவனின் தொல்லை தாங்க முடியாமல் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது தந்தையிடம் கூறியதை அடுத்து, அச்சம்பவம் அம்பலமானது.
குறிப்பாக, கடந்த மே மாதம் 14-ஆம் தேதி, அதிகாலை மணி மூன்று தொடங்கி, அவ்வாடவன் அந்த அருவருக்கத்தக்க செயலை புரிந்ததாக கூறப்படுகிறது. அதோடு, அவனுக்கு அஞ்சி பாதிக்கப்பட்ட மாணவன் அது தொடர்பில் யாரிடமும் கூறவில்லை.
சம்பந்தப்பட்ட மாணவனின், தாயார் விவாகரத்து பெறும் நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதால், அம்மாணவர் தற்காலிகமாக சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.
அவ்விஷயம் தெரிந்ததும், கடந்த ஞாயிற்றுகிழமை அவ்வாடவனை வீட்டிற்கு அழைத்து தாக்கிய மாணவனின் தந்தை, பின்னர் அது குறித்து போலீஸ் புகார் செய்துள்ளார்.
அதனை தொடர்ந்து, கைதுச் செய்யப்பட்ட அவ்வாடவன் விசாரணைக்காக இம்மாதம் 30-ஆம் தேதி வரையில், ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.