மலாக்கா, டிசம்பர் 14 – வளர்ப்பு தங்கையிடம், உடல் ரீதியாக மற்றும் வாய் மொழியாக ஆபாசமாக நடந்து கொண்ட பதின்ம வயது இளைஞன் ஒருவன், அயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டான்.
18 வயது கமருதீன் முஹம்மது அமீன் எனும் அவ்வாடவன், கடந்த செப்டம்பரில், 13 வயதான யுவதியிடம், உடல் ரீதியாக அக்குற்றத்தை புரிந்ததாக முதல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான சிறையும், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.
அதே யுவதியிடம், ஆபாசமாக பேசியதாக இரண்டாவது குற்றச்சாட்டையும் அவன் எதிர்நோக்கியுள்ளான்.
அக்குற்றத்திற்கு, அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறையும், இருபதாயிரம் ரிங்கிட் அபராதமும் விதிக்க சட்டம் வகை செய்கிறது.
மலாக்கா, போக்கோக் மங்காவிலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றங்களை புரிந்துள்ளான்.
இன்று வழக்கு விசாரணையின் போது, அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதால், வயது குறைந்த அவனுக்கு தண்டனை விதிப்பதற்கு முன் சமூகநலத் துறையின் அறிக்கையை பெற வேண்டும் என்பதால், மற்றொரு தேதியை நிர்ணயிக்குமாறு, அரசாங்க தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.
அதனால், இவ்வழக்கு அடுத்தாண்டு ஜனவரி 18-ஆம் தேதி செவிமடுக்கப்படும்.