நாட்டின் மீதான மலேசியர்களின் விசுவாசம் தொடர்பில் கேள்வி எழுப்பக்கூடாது என அனைத்துலக வாணிக தொழில்துறையின் முன்னாள் அமைச்சர் ரபிடா அஜிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் பல இன கலச்சார மற்றும் சமயங்களின் பன்முகத்தன்மையை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து மதிக்கும்படி மலேசியர்களை அவர் கேட்டுக் கொண்டார். நாம் இப்போது 2024 ஆம் ஆண்டில் இருந்து வருகிறோம். நமது பன்முகத்தன்மையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையாக இருந்து வலுவான போட்டா போட்டியைக் கொண்ட மலேசியாவை உருவாக்குவதற்கு தொடர்ந்து பாடுபடுவோம் என ரபிடா வலியுறுத்தினார்.
நாட்டின் மீது வைத்திருக்கும் விசுவாசம் மற்றும் நேசம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் இல்லையென அவர் தெரிவித்தார். அண்மையில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் நாட்டின் மீதான விசுவாசம் குறித்து கருத்துரைத்தது தொடர்பில் ரபிடா அஜிஸ் இதனை தெரிவித்தார். பல்வேறு இனங்களைக் கொண்ட பல மலேசியர்கள் அரசாங்கத்தின் எந்தவொரு நிதியுதவியும் இன்றி அனைத்துலக நிலையில் பல்வேறு தொழில்துறைகளில் நாட்டிற்கு பெருமை தேடித் தந்திருப்பதையும் இன்று வெளியிட்ட அறிக்கையொன்றில் ரபிடா சுட்டிக்காட்டினார்.