பினாங்கு, ஜூன் 15 -இந்தியா மற்றும் மலேசியாவிற்கான நட்புறவு வலுவடைந்துள்ளதால் இருவழி வர்த்தகம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை மேலும் வலுப்படுத்த குறிப்பாக இந்தியாவில் இருந்து மலேசியாவிற்கு செல்லும் பயணிகளுக்கு விசா தளர்வை மலேசிய அரசு ஏற்படுத்தியதுபோல இந்தியாவும் அத்தகைய நடவடிக்கையை அமல் படுத்தவேண்டும் என நாடாளுமன்றத்தில் கோரிக்கை எழுப்பப்போவதாக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ் கனி தெரிவித்திருக்கிறார்.
பினாங்கில் நடைபெறும் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொள்ள வருகை அளித்த அவருக்கு பெலித்தா நிறுவனம் பினாங்கு லைட் ஹோட்டலில் நடத்திய சிறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோது தமிழ்நாடு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவருமான கே. நவாஸ் இதனை செய்தியாளர்களிடம் கூறினார்
முன்பு தமிழகத்திற்கு பினாங்கில் இருந்து விமானச் சேவை நடைபெற்று வந்தது. இந்த சேவை மீண்டும் தொடரவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் பேச்சு நடத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பல சமுக அமைப்புகள் கே. நாவாஸ் கனிக்கு மாலை , பொன்னாடை அணிவித்து கௌரவரப்படுத்தியதுடன் பெலித்தா சமுக நல அமைப்பு அவருக்கு லட்சிய வேந்தர் எனும் விருதை வழங்கி கௌரவித்தது. இந்த நிகழ்வில் பினாங்கு லைட் ஹோட்டலின் நிர்வாக இயக்குனர் டான்ஸ்ரீ ரமேஸ் , தமிழக தொழில் அதிபர் டாக்டர் கே. சிராஜூடின் , தொழில் அதிபர் டத்தோ ஜவ்வர் அலி, பெலித்தா நிறுவன இயக்குனர் டத்தோ உஸ்வத், பேரா மாநில நகைக் கடைகளின் சங்கத் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.