கோலாலம்பூர், ஜன 15 – மலேசிய இந்தியர்களின் விசுவசாசம் குறித்து கேள்வி எழுப்பியதன் மூலம் அவர்களை சிறுமைப்படுத்திய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டை DAPயின் தலைவர் லிம் குவான் எங் சாடினார். ஒரு காலத்தில் மலேசியர் இனம் குறித்து வாய் இனிக்க பேசிய மகாதீர் இப்போது அவர்களின் விசுவாசம் தொடர்பில் கேள்வி எழுப்புவது எந்த வகையிலும் நியாயம் அல்ல. அதுவும் முதல் முறை 22 ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்து பிறகு இரண்டாவது முறையாகவும் அந்த பதவியை வகித்த ஒரு தலைவரிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்திருக்கவே கூடாது . இது கண்டிக்கத்தக்கது என லிம் குவான் எங் தெரிவித்தார்.
ஏற்கனவே பெரும்பான்மை மலேசியர்களின் ஆதரவை இழந்த 98 வயது மகாதீர் இப்போது மீண்டும் மக்களின் ஆதரவை பெறுவதற்காக தீவிரவாத, இனவாத மற்றும் ஆபத்தான அம்சங்களை கையில் எடுத்துள்ளார். மலேசிய மக்களையும் மலேசிய நாட்டையும் ஒற்றுமைப்படுத்த வேண்டிய ஒரு முன்னாள் பிரதமர் இனத்துவேசமாக பேசியிருப்பது எந்தவகையிலும் ஏற்க முடியாத ஒன்று என பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் குவான் எங் தெரிவித்தார்.