கோலாலம்பூர், நவ 15 -மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முன்னாள் தலைமைச் செயலாளரான காலஞ்சென்ற ஜி. ராஜசேகரனுக்கு மனித வள அமைச்சின் சிறந்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மலேசியா தொழிற்சங்க காங்கிரஸில் நீண்ட காலம் அதன் தலைமைச் செயலாளராக இருந்து தொழிற்சங்க உறுப்பினர்களின் நலனுக்காகவும் உரிமைக்காகவும் குரல் கொடுத்த ராஜசேகரனின் சேவையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவரது சார்பில் அவரது துணைவியார் மிமி அங் ஷவ் லும் அந்த விருதை பெற்றுக்கொண்டார். மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பேராளர் மாநாட்டில் ராஜசேகரனுக்கு இந்த சிறப்பு விருதை வழங்கி மனித வள அமைச்சர் வ.சிவக்குமார் கௌரவித்தார்.
இதனிடையே 2025 ஆம் ஆண்டுக்கு முன்னதாகவே தொழிற்சங்கத்தில் ஒரு மில்லியன் பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என சிவகுமார் நம்பிக்கை தெரிவித்தார். அதிகமானோர் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்பதையே மனித வள அமைச்சு விரும்புவதாக அவர் கூறினார். நாட்டில் 16 மில்லியன் தொழிலாளர்கள் உள்ளனர். அவர்களில் பாதிப்பேர் தொழிற்சங்கத்தில் இணைந்தால்கூட அது பெரிய தொகையாக இருக்கும் என அவர் தெரிவித்தார். புகார்களை தெரிவிக்கும் உரிமையை தொழிலாளர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்களது புகார்களை கவனித்து நடவடிக்கை எடுக்கும் கடப்பாட்டை மனிதவ அமைச்சு கொண்டிருப்பதாகவும் சிவக்குமார் தெரிவித்தார்.