கோலாலம்பூர், நவ 16 – மலேசிய மடானி தேசிய கோட்பாட்டை அறிமுகப்படுத்துவது மற்றும் விளம்பர நடவடிக்கைளுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இதுவரை 8.9 மில்லியன் ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக சபா, சரவா விவகாரங்கள் மற்றும் சிறப்பு பணிகளுக்கான பிரதமர்துறை அமைச்சர் டத்தோ அர்மிசான் முகமட் அலி தெரிவித்திருக்கிறார். விளம்பர பலகைகள், பதாகைகள், மற்றும் நாடு தழுவிய நிலையில் அடையாளங்களை வைப்பதற்கும் இந்த தொகை செலவிடப்பட்டதாக அவர் கூறினார்.
அரசாங்கத்தின் அனைத்து அமைச்சுகள், துறைகள் மற்றும் பொருத்தமான தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலமாகவும் மடானி கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அர்மிசான் தெரிவித்தார். அரசாங்கத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப மக்களிடையே புரிந்துணர்வை வலுப்படுத்துவதற்கு இத்தகைய முயற்சிகள் அவசியம் தேவையென அவர் கூறினார்.