புத்ராஜெயா, ஜனவரி 19 – பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இரண்டு நாள் பள்ளி சீருடை, இரண்டு நாள் விளையாட்டு உடைகள் மற்றும் ஒரு நாள் புறப்பாட நடவடிக்கைகளுக்கான ஆடைகளை அணியலாம்.
2024/2025 பள்ளி தவணையில், மாணவர்கள் பின்பற்ற ஏதுவாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய ஆடை வழிகாட்டி அதுவாகும்.
கல்வி அமைச்சின் புத்தாண்டு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பட்லினா சிடேக் அந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த ஆடை வழிகாட்டி தொடர்பான புதிய சுற்றரிக்கையும், மேல் விவரங்களும் பின்னர் வெளியிடப்படுமெனவும், பட்லினா சொன்னார்.
முன்னதாக, புதிய பள்ளி தவணை மார்ச்சில் தொடங்கவிருப்பதால், மாணவர்களின் சீருடை விதிகள் குறித்து, நாடு முழுவதும் உள்ள பெற்றோர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
புதிய பள்ளித் தவணையும், ரமலான் மாதமும் ஒருங்கே தொடங்குவதால், பெற்றோர்களின் நிதிச் சுமையைக் குறைக்க அந்த வழிகாட்டி அவசியம் என்பதை பட்லினா சுட்டிக் காட்டினார்.
கோவிட்-19 பெருந் தொற்றால் கிட்டத்தட்ட ஈராண்டுகளுக்கு பிறகு, 2021-ஆம் ஆண்டு அக்டோபரில் பள்ளி தவணை தொடங்கிய போது, மாணவர்களுக்கான சீருடை விவகாரத்தில் கல்வி அமைச்சு தளர்வு வழங்கி இருந்தது.
மாறாக, கடந்தாண்டு நெடுகிலும் கூட அந்த தளர்வு அமலில் இருந்த வேளை ; இவ்வாண்டும் அது தொடரப்பட வேண்டுமென பெற்றோர்களும், மாணவர்களும் விரும்புவதாக கூறப்படுகிறது.