கோலாலம்பூர், ஏப்ரல் 24 – நாட்டில் 4,500 திரைப்படத் துறை ஊழியர்கள் விரைவில் SOCSO சமூகப் பாதுகாப்பைப் பெறவிருக்கின்றனர்.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான SOCSO-வுக்கும் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் FINAS-சுக்கும் இடையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் MOU கையெழுத்தாகியிருப்பதால், அது சாத்தியமாகிறது.
அந்த 4,500 ஊழியர்களுக்கும் ஆண்டுக்கு தலா 232 ரிங்கிட் 80 காசு என்ற சந்தா பங்களிப்பில், மொத்தம் 104,850 ரிங்கிட்டை அது உட்படுத்தியிருப்பதாக மனிதவள அமைச்சர் Stevan Sim கூறினார்.
அவர்களில் ஒவ்வொருவருக்குமான SOCSO சந்தா பங்களிப்பில் 90% தொகையை அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும், மீதி 10% தொகையை FINAS செலுத்தும் என Stevan விளக்கினார்.
இன்று MOU கையெழுத்தாகியிருப்பதால், FINAS-சுடன் தங்கள் படப்பிடிப்பு உரிமத்தை புதுப்பிக்க விரும்பும் எந்தவொரு நிறுவனமும், இனி படக்குழுவைச் சேர்ந்த பணியாளர்களுக்கு Socso பங்களிப்புகளை வழங்க வேண்டும் என்றார் அவர்.
அதே நிகழ்வில் கலந்துக் கொண்ட தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil, உள்நாட்டு படைப்புத் துறையில் உள்ளவர்களுக்கு உதவுவதில் இது ஒரு பெரிய படி என வருணித்தார்.
“நாம் எப்போதும் திரையில் தெரியும் நடிகர்களைப் பற்றித் தான் பேசுகிறோம், திரைக்குப் பின்னால் வியர்வை சிந்தி உழைப்போரை கண்டுக் கொள்வதில்லை. எனவே இந்த SOCSO பாதுகாப்பு ஒரு சிறந்த முன்னெடுப்பு” என Fahmi கூறினார்.