![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/cuaca27_1719478303.jpg)
ஜெலெபு, ஜூன்-27 – நெகிரி செம்பிலான், ஜெலெபுவில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி, அருகிலிருந்த உணவுக் கடையின் மீது தீப்பொறிகள் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றிரவு 8 மணி வாக்கில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, உணவருந்திக் கொண்டிருந்த 4 வாடிக்கையாளர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தலைதெறிக்க ஓடினர்.
மழை இருட்டிய சமயம், கண்ணிமைக்கும் நேரத்தில் பெரும் சத்தத்துடன் தென்னை மரம் தீ பற்றிக் கொண்டதாக, உணவக உரிமையாளர் கூறினார்.
அப்போது தானும் இதர 4 வாடிக்கையாளர்களும் கடையில் இருந்த வேளை, தனது மனைவியும் 3 பிள்ளைகளும் அருகிலிருந்த கூடாரத்தின் கீழ் அமர்ந்திருந்ததாக அவர் சொன்னார்.
இடி மின்னல் சத்தம் கேட்டதுமே, கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் ஓடிச் சென்று தத்தம் காருக்குள் புகுந்துக் கொண்டனர் என்றார் அவர்.
தென்னை மரத்தில் இருந்து உணவகப் படுதா (canvas) மீது விழுந்த தீப்பொறி விரைந்து அணைக்கப்பட்டது.
நல்லவேளையாக அதில் எவருக்கும் காயமோ பொருள்சேதமோ ஏற்படவில்லை.
தென்னை மரத்தில் தீயை அணைக்க, ஜெலெபு தீயணைப்பு மீட்புத் துறையினரின் உதவி நாடப்பட்டது.