பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 15 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மீண்டும் மாணவராகியுள்ளார்.
வட மலேசியப் பல்கலைக் கழகத்தில் தாம் மேற்படிப்பைத் தொடருவதை இன்று உறுதிச் செய்த அவர், ‘எனக்கு மாணவர் அட்டை கிடைத்து விட்டது; நான் இன்று மாணவராகி விட்டேன்; கடவுளுக்கு நன்றி’ என பெருமிதத்துடன் தனது முகநூல் பக்கத்தில் அந்த மாணவர் அட்டையை பகிர்ந்து கொண்டுள்ளார்.
எனினும் தாம் தேர்ந்தெடுத்துள்ள பட்டப்படிப்பு குறித்து மேல் தகவல் எதனையும் அந்த ஒன்பதாவது பிரதமர் தெரிவிக்கவில்லை.
வயதாகி விட்ட நிலையில் மீண்டும் மாணவராவேன் என்பதை நினைத்துப் பார்க்கவில்லை என்றும், இதைத் தான் வாழ்நாள் முழுவதும் கல்வி என்பார்கள் என்றும் முகநூலில் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்மாயில் சப்ரியின் அப்பதிவு, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்ததோடு வாழ்த்துகளையும் குவித்து வருகிறது.
“உங்களை நினைத்துப் பெருமைப் படுகிறோம்”, “விரும்பும் வரை படியுங்கள், டத்தோ ஸ்ரீ!, “உங்களைப் பார்த்து எங்களுக்கும் படிப்பைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் உதிக்கிறது, டத்தோ ஸ்ரீ” என கருத்துகள் குவிகின்றன.
2021-ஆம் ஆண்டு முதல் 2022 நவம்பர் வரை நாட்டின் ஒன்பதாவது பிரதமராக டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.