கோலாலம்பூர், மார்ச் 7 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் எஞ்சிய சிறைத் தண்டனையை, PBSL எனப்படும் அனுமதியோடு கைதிகளை விடுவிக்கும் திட்டத்தின் கீழ், வீட்டிலேயே அனுபவிக்க வேண்டும் என்ற மேல்முறையீட்டு விண்ணப்பத்திற்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
அந்த கேள்வியை பெரா தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் பிரதமருமான டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோம் முன் வைத்துள்ளார்.
இதற்கு முன் கூடிய தேசிய மன்னிப்பு வாரியத்திடம், ஏற்கனவே அந்த மேல்முறையீடு முன் வைக்கப்பட்டுள்ளது என்பதை அறிவேன்.
குறிப்பாக, மன்னிப்பு முறையீட்டுடன் அந்த மனுவையும் நஜிப் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
எனினும், அது உண்மையா இல்லையா என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டுமென, மக்களவையில் இன்று இஸ்மாயில் சப்ரி கேள்வி எழுப்பினார்.
அப்படியே அது உண்மையென்றால், அந்த மனுவுக்கான முடிவை எப்பொழுது அரசாங்கம் அறிவிக்கும் எனவும் அவர் வினவினார்.
கடந்த வாரம், PBSL எனப்படும் அனுமதியோடு கைதிகளை வீட்டுக் காவலில் வைக்கும் திட்டத்திற்கு அரசாங்கம் கொள்கை அளவில் இணக்கம் தெரிவித்திருப்பதாக, உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் கூறியிருந்தார்.
எனினும், நஜிப்பை சிறையிலிருந்து விடுவித்து வீட்டுக் காவலில் வைக்கவே அரசாங்கம் அத்திட்டத்தை செயல்படுத்த இணக்கம் தெரிவித்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை சைபுடின் திட்டவட்டமாக மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.