சிரம்பான், ஜன 17 – சிலியாவைச் சேர்ந்த 74 வயது முதியவர் முகமட் ஸாஹிட் நாகப்பன் என்பவரை கொலை செய்ததாக 17 வயதுடை இளைஞன் மீது சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மாஜிஸ்திரேட் சையட் ஃபரிட் சையட் அலி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அந்த இளைஞனிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஜனவரி 3ஆம் தேதி இரவு மணி 11.30 க்கும் மறுநாள் காலை 10 மணிக்குமிடையே முகமட் ஸாஹிட் நாகப்பன் என்பவரை கொலை செய்ததாக குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது விதியின் கீழ் அந்த இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சவ பரிசோதனை அறிக்கை இன்னும் தயாராகவில்லை என்பதால் இந்த குற்றச்சாட்டு மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்பட வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் டி.பி.பி புஸ்பா நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டு மார்ச் 18ஆம் தேதி மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் என என மாஜிஸ்திரேட் சையட் ஃபரிட் தெரிவித்தார். முகமட் ஸாஹிட் நாகப்பனின் உடல் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனவரி 4ஆம்தேதி குற்றஞ்சாட்டப்பட்ட நபரையும் அவனது 25 வயது சகோதரனையும் போலீசார் கைது செய்தனர். அந்த முதியவரின் முதுகு மற்றும் அவரது இரு கால்களிலும் கத்திக் குத்து காயங்கள் காணப்பட்டன.