ஆக்ரா, ஜன 30 – நாட்டில் திருமணத்திற்கு நிகராக சமீப காலங்களில் விவகாரத்து வழக்குகளும் அதிகரித்து வருகின்றன. கணவன்-மனைவி இடையே ஏற்படும் சின்ன பிரச்சனைகளும் கூட விவாகரத்து வரை வந்து நிற்பதை நாம் சர்வ சாதாரணமாக ஆங்காங்கே கேட்கிறோம்.
அந்த வகையில் உத்தர பிரதேசத்தில் நூதனமான ஒரு விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்திற்கு வந்துள்ளது. அதாவது ஆக்ரா மாநிலத்தில் மருமகளின் ‘மேக்-அப்’ பொருட்களை அனுமதியின்றி மாமியார் அடிக்கடி பயன்படுத்தி வந்துள்ளதால் ஆத்திரமடைந்த மருமகள் விவகாரத்து கேட்டுள்ளார்.
முதலில் மாமியாரும் மருமகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது பெரிய சண்டையாக முற்றி, அவரது கணவர் மனைவியை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். கோபமடைந்த மருமகள், தாய் பேச்சை கேட்டு நடக்கும் கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்று விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அனுமதியின்றி மேக்-அப் பொருட்களை மாமியார் பயன்படுத்துவது மட்டுமே விஷயம் இல்லை. அந்த பெண்ணின் கணவர், குடும்ப வன்முறையில் ஈடுபடுவதும், தாயார் கூறும் விஷயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவதும் காரணமாக முன்வைத்துள்ளார் அம்மனைவி.
இதனைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த பெண் மற்றும் கணவர் இருவரையும் அழைத்து கவுன்சிலிங் வழங்கப்படும் என நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.