கோலாலம்பூர், மார்ச் 13 – ரமலான் மாதத்தில் அதிகமான உணவுகள் விரயமாக்கப்படுவதைக் கண்டறிந்த பினாங்கு பயனீட்டாளர் சங்கம், கடந்த பத்து ஆண்டுகளாக அதற்கு எதிரான பிரச்சாரங்களை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகின்றது.
கடந்தாண்டு ரமலான் மாதம் நெடுகிலும், சுமார் 90 ஆயிரம் டன் உணவு குப்பையில் கொட்டப்பட்டதாக CAP நேற்று தகவலை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹிடின் அப்துல் காடீரிடம் வணக்கம் மலேசியா கேட்கையில், ‘முஸ்லிம் நண்பர்கள் இம்மாதத்தை அரத்தமுள்ளதாகவும், ஆன்மீக ரீதியாகவும் வைத்திருக்க வேண்டும். மாறாக சிலர் இக்காலகட்டத்தில் விருந்துகளை வைத்து உணவுகளை விரயம் செய்கின்றனர்’ என்று சுட்டிக்காட்டினார்.
‘அளவிற்கு மிஞ்சினால் அமிர்ந்தமும் நஞ்சு’ என்பதற்கு ஏற்ப பெருநாள் காலக்கட்டமாக இருந்தாலும் அளவாக உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திய அவர், வீட்டில் அல்லது மசூதியில் நோன்பு துறப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இதன் வழி மலேசியர்களிடையே நல்லுறவையும் புரிந்துணர்வையும் வலுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்தார்.