கோலாலம்பூர், டிசம்பர் 19 – பஹாங், ரவுப்பிலுள்ள, இடைநிலைப்பள்ளி ஒன்றின் மறுசீரமைப்புப் பணியை முன்னிட்டு நிதி திரட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஏலத்தில், “முசாங் கிங்” வகை டுரியான் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட்டுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
அதன் வாயிலாக, உலகில் அதிக விலையில் விற்கப்பட்ட டுரியான் பழமாக அது கருதப்படுவதாக, பஹாங் தொடர்பு பல்லூடக, இளைஞர், விளையாட்டு, அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் ஆட்சிக் குழு உறுப்பினர் பட்ஸ்லி முஹமட் கமால் தெரிவித்தார்.
அந்த செய்தியை தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள பட்ஸ்லி, முதலில் ஈராயிரம் ரிங்கிட்டிற்கு தொடங்கப்பட்ட அந்த ஏலம் சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரிங்கிட்டில் முடிவுற்றது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதாக கூறியுள்ளார்.
அந்த முசாங் கிங் டுரியானை தவிர்த்து, அந்த ஏலத்தில் “பிளக் டோன்” (Black Thorn) ரக டுரியான் ஒன்று 15 ஆயிரம் ரிங்கிட் விலையில் விற்கப்பட்டதாகவும் பட்ஸ்லி குறிப்பிட்டுள்ளார்.
ரவுப்பிலுள்ள, சுங்கை ருவன் இடைநிலைப் பள்ளியில் அந்த ஏலம் நடைபெற்றது.
அந்த ஏலத்தில் கலந்து கொண்ட பஹாங் டுரியான் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் டத்தோ லை வீ கென் இரண்டு லட்சத்து நான்காயிரத்து 444 ரிங்கிட்டை நன்கொடையாக வழங்கிய வேளை ; ஏலத்தின் வாயிலாக மொத்தம் நான்கு லட்சத்து நான்காயிரத்து 444 ரிங்கிட் மொத்த நன்கொடை திரட்டப்பட்டது.