கோலாலம்பூர், பிப் 15 – 8.9 மில்லியன் ரிங்கிட் போலி பணக் கோரிக்கை தொடர்பாக அரிசி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஃபிக்ரி அபு பக்கர் மீது செஷன்ஸ் நீதிமன்றத்தில் 28 குற்றச்சாட்டுக்கள் கொண்டுவரப்பட்டன. நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் அனைத்து குற்றச்சாட்டுகளும் வாசித்து முடிக்கப்பட்டபோது அவற்றை 58 வயதுடைய ஃபிக்ரி மறுத்தார். ஃபிக்ரி ரைஸ் Sdn Bhd என்ற நிறுவனத்தின் இயக்குநர் என்ற முறையில் அந்த நிறுவனத்தின் நடவடிக்கை அதிகாரியான 37 வயதுடைய முஹம்மட் அய்சுடின் ஸகாரியா என்பவர் மூலமாக 8.9 மில்லியன் ரிங்கிட் பெறுவதற்கான இன்வோய்ஸ் வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
உண்மையில் அரிசி வாங்கவில்லை என்பதோடு அந்த இன்வோய்ஸ் அனைத்தும் பொய்யாக தயாரிக்கப்பட்டவை என தெரிய வந்ததாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிக்குமிடையே ஃபிக்ரி அனைத்து குற்றச்சாட்டுக்களையும் புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஒரு நபர் உத்தரவாதத்தின் கீழ் அவருக்கு ஒரு லட்சம் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டு மார்ச் 25ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.