அலோர் ஸ்டார், ஜனவரி 16 – லங்காவி, பந்தாய் செனாங் கடற்கரையில், ஒரு சிறிய தட்டு “ஆயாம் கோரிங் கூஞிட்” கோழி உணவிற்கு, இருபது ரிங்கிட்டை கட்டணமாக விதித்த, உணவக உரிமையாளர் ஒருவர், அந்த விலை குறித்து விளக்கமளிக்க, உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சு இரண்டு நாள் கால அவகாசம் வழங்கியுள்ளது.
அச்சம்பவத்தை, வாடிக்கையாளர் ஒருவர் தமது சமூக ஊடகத்தில் பதிவிட்டதை தொடர்ந்து வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட உணவகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்ட போது, அங்கு வாடிக்கையாளர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த உணவு “மெனு” புத்தகத்தில், “நாசி கோரிங் கூஞிட்டின்” விலை 20 ரிங்கிட் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
அதனால், அந்த விலைக்கான விளக்கத்தை பெற சம்பந்தப்பட்ட வியாபாரிக்கு, காரணம் கோரும் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளதாக, கெடா உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் இயக்குனர் அபெண்டி ரஜினிகாந்த் தெரிவித்தார்.
முன்னதாக, பந்தாய் செனாங்கிலுள்ள, உணவகம் ஒன்றுக்கு சென்ற, வாடிக்கையாளர் ஒருவர், ஒரு தட்டு “நாசி கோரிங் கூஞிட்” உணவுக்கு 20 ரிங்கிட் கட்டணமாக விதிக்கப்பட்டது தொடர்பில், தமது சமூக ஊடகத்தில் அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அதோடு, ஹடா ஜாயிஸ் எனும் அந்நபர், தாம் செலுத்திய விலைக்கான “ரசீதையும்” அந்த பதிவில் இணைத்திருந்தார்.
எனினும், நேரடியாக விளக்கம் பெற, உள்நாட்டு வாணிப, வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளரை தொடர்புக் கொள்ள முயன்ற போது, அவர் தொலைப்பேசி அழைப்புக்கு பதிலளிக்கவில்லை என்பதையும் அபெண்டி உறுதிப்படுத்தினார்.