லங்காவி, பிப்ரவரி 11 – கெடா, லங்காவி, தஞ்சோங் ரு கடற்கரையில், 600 மீட்டர் நீளத்திற்கு மணல் திட்டு தோன்றியதை தொடர்ந்து, கடலில் பிளவு ஏற்பட்டது.
அந்த அரிய காட்சி, மூவாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.
இன்று அதிகாலை மணி 6.45 தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்களுக்கு அந்த தனித்துவமான நிகழ்வு நீடித்தது.
ஆண்டுக்கு ஒருமுறை, சம்பந்தப்பட்ட கடல் பகுதியில், நீரின் அளவு 0.1 மீட்டர் வரை குறையும் போது, அந்த அரிய காட்சியை காணும் வாய்ப்பு கிட்டுமென கூறப்படுகிறது.
அதே நிகழ்வு நாளை காலை மணி 7.30 வாக்கில் மீண்டும் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
தஞ்சோங் ரு பகுதி மிகவும் ஆழம் வாய்ந்தது என்பதோடு, வழக்கமாக அங்கு உயர் அலைகள் ஏற்படும்.
எனினும், அவ்வாறு நீர் வற்றும் போது, கடற்கரையிலிருந்து சாபாங் தீவு மற்றும் கெலம் பயா தீவு வரை நடந்து செல்ல முடியும் எனவும், காண்பதற்கு அரிதான கடல் குதிரைகள், கூம்பு நத்தைகள், ஜெல்லி மீன்கள் போன்ற பல்வேறு கடல்வாழ் உயிரினங்களை பார்க்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
கடந்த 19 ஆண்டுகளாக, லங்காவில் அந்த அரிய நிகழ்வு ஏற்பட்டு வரும் வேளை ; அதனை காண சுற்றுப் பயணிகள் படையெடுப்பது வழக்கமென லாடா எனும் லங்காவி மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.