கோலாலம்பூர், மார்ச் 1 – மன்னர் ஐந்தாம் Harald-டுவை தாயகம் அழைத்து செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக நோர்வே அரண்மனை அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கெடா, லங்காவியில் சிகிச்சை பெற்று வரும் மன்னர் Harald இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பார் என அரண்மனை தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில், Harald மன்னருக்கு சிறந்த கவனிப்பு வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தென்படுவதாகவும் அவரது அந்தரங்க மருத்துவரும் கூறியுள்ளார்.
“இன்னும் சில நாட்களில் அவர் விமானம் மூலம் நோர்வேக்குத் திரும்ப வேண்டும் என்பதே முதன்மை குறிக்கோள் ஆகும். அதற்கு தேவையான போக்குவரத்து வசதிகளை நோர்வே அரசாங்கம் கவனித்து வரும் வேளை ; மன்னரை பாதுகாப்பாக தாயகம் கொண்டு சேர்க்கும் கடப்பாட்டை அந்நாட்டு ஆயுதப்படை கொண்டுள்ளது” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, விடுமுறையை கழிக்க மலேசியா வந்திருந்த போது, மன்னர் Harald திடீரென நோய்வாய்பட்டு, லங்காவியிலுள்ள, Sultanah Maliha மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக, உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.