லங்காவி, பிப் 7 – சீனப் பெருநாளுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் இவ்வேளையில் லங்காவியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் விநியோக தட்டுப்பாடு பிரச்சனைக்கு, சாத்தியமான விரைவில் தீர்வு காணப்படும் என அங்குள்ள குடியிருப்பு வாசிகளும் சுற்றுலா தொழில்துறையை சேர்ந்தவர்களும் நம்புகின்றனர். லங்காவி தீவில் முக்கிய பிரச்சனையாக தண்ணீர் நெருக்கடி இருப்பதாக தங்கும் விடுதி நடத்துவோரும் கூறுகின்றனர். சீன புத்தாண்டு விடுமுறை காலத்தில் அதிகமான சுற்றுப்பயணிக்ள் லங்காவிக்கு வருகை புரிவார்கள் என்பதால் நீர் விநியோக பிரச்சனையினால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அயர் ஹங்காட்டில் மூன்று ஹோம் ஸ்டே விடுதிகளை நடத்திவரும் அலி ஹாடி ஸ்ஜம்சுல் தெரிவித்திருக்கிறார்.
லங்காவி தீவுக்கான தண்ணீர் விவகாரத்தை தீர்க்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பிரச்சனை தொடரக்கூடாது என பொதுமக்களில் பலர் கோரிக்கை விடுத்தனர். உள்நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கும் முக்கிய சுற்றுலா மையமாக லங்காவி திகழ்கிறது. ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் விநியோக தட்டுப்பாடு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளிடையே மோசமான தோற்றத்தை ஏற்படுத்தும் என கடந்த ஏழு நாட்களாக கிசாப்பில் தமது வீட்டில் தண்ணீர் விநியோகம் இன்றி தவித்துவரும் வலிதேஷு என்ற பெண்மணி தெரிவித்தார்.