லங்காவி, பிப் 13 – கெடா லங்காவியில் கடந்த மூன்று ஆண்டு காலமாக இருந்துவரும் தண்ணீர் நெருக்கடியினால் அங்கு வசித்துவரும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் முறையான மற்றும் சுத்தமான நீர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களின் பிரச்சனையை துணைப்பிரதமர் அஹ்மாட் சாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி அரவிந்த் அப்பளசாமி நேரடியாக சென்று கண்டதோடு இந்த விவகாரத்தை கூட்டரசு அரசாங்கம் மற்றும் துணைப்பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லப்போவதாகவும் தெரிவித்தார்.
கம்போங் கிசாப், தாமான் சுங்கை ராயா, கம்போங் தெலுக், கம்போங் பெலங்கா பெச்சா, கம்போங் புக்கிட் புத்தி ஆகிய 5 குடியிருப்பு இடங்களில் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளில் குழாய்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலான நாட்களில் நீர் விநியோகம் இன்றி தாங்கள் பிரச்சனையை எதிர்நோக்குவதாக அங்குள்ள குடியிருப்புவாசிகள் தங்களது மனக்குமுறலையும் பகிர்ந்து கொண்டனர்.
இதனிடையே லங்காவி மக்கள் எதிர்நோக்கிவரும் தண்ணீர் நெருக்கடி தமக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளதோடு இந்த விவகாரத்திற்கு தற்காலிக நிவாரணமாக முக்கிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மக்களுக்கு தண்ணீர் விநியோகம் முழுமையாக கிடைப்பதற்கு 5 இடங்களில் நீர் உறைஞ்சு குழாய்கள் பொருத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என அரவிந்த் அப்பளசாமி தெரிவித்தார்.