லியோனல் மெஸ்ஸி காரணமாக டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கோரும் ஹாங்காங் ரசிகர்கள்
ஹொங்கொங், பிப் 11 – அர்ஜென்டினா கால்பந்து உச்ச நட்சத்திரமான லியோனல் மெஸ்ஸி தனது காயத்திலிருந்து அதிசயமாக மீண்டு வந்துள்ளது ஹாங்காங் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிறன்று ஹொங்கொங் XI அணியுடன் “Inter Miami” அணி நட்பு ரீதியான ஆட்டத்தில் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் காயம் காரணமாக லியோனல் மெஸ்ஸி விளையாடவில்லை. இது ஹாங்காங் ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றதை ஏற்படுத்தியது.
ஆனால் தீடிரென 3 நாட்களுக்கு பிறகு ஜப்பானின் “Vissel Kobe” அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்ஸி களமிறங்கியுள்ளது தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால்பந்து ரசிகர்கள் மட்டுமின்றி, ஹாங்காங் மற்றும் சீனத்து அரசியல்வாதிகளும் மெஸ்ஸியின் இந்த செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மெஸ்ஸியின் ஆட்டத்தை நேரில் பார்க்கலாம் என்ற ஆசையில் முண்டியடித்த ரசிகர்கள் தற்போது டிக்கெட் கட்டணத்தைத் திரும்பக் கோரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இது ஹாங்காங் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் பலரும் கருத்துப் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், அனைத்து கால்பந்து ரசிகர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் கட்டாயமாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால் ஜப்பான் ஆட்டத்திற்கு முன்னர், ஹாங்காங் ரசிகர்களிடம் மெஸ்ஸி மன்னிப்புக் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.