![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/07/hrd-700x470.png)
கோலாலம்பூர், ஜூலை-5 – தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை மற்றும் நாடாளுமன்ற பொது கணக்குத் தணிக்கைக் குழு (PAC) சுட்டிக் காட்டியுள்ள அம்சங்களை கவனத்தில் எடுத்துக் கொள்வதாக மனிதவள மேம்பாட்டுக் கழகம் HRD Corp கூறியுள்ளது.
மேம்படுத்தப்பட வேண்டிய விஷயங்கள் எனக் கூறி அவ்விரு தணிக்கை அறிக்கைகளிலும் சுட்டிக் காட்டப்பட்டவை 2019 முதல் 2023 வரைக்குமான காலக்கட்டத்தை உட்படுத்தியவை.
அதற்கேற்றால் போல நாங்களும் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தோம் என அக்கழகத்தின் தலைவர் டத்தோ அபு ஹுராய்ரா அபு யாசிட் (Datuk Abu Huraira Abu Yazid) கூறினார்.
குறிப்பாக லெவி கட்டண வசூலிப்பை அதிகரிக்க நடவடிக்கைகளை எடுத்தோம்.
அதன் பலனாக, கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்ப தாக்கம் இருந்தபோதிலும், பயிற்சி நிதியின் வரி வசூல் மற்றும் பயன்பாட்டு விகிதங்கள் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக மேம்பட்டுள்ளன.
லெவி வசூலும் 2020-ல் 475 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 2023-ல் 2.13 பில்லியன் ரிங்கிட்டாக குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
லெவி பயன்பாட்டு விகிதமும் 2020-ல் 63 சதவீதத்திலிருந்து 2023-ல் 71 சதவீதமாக உயர்ந்தது.
இடையில் 2020 – 2021 காலக்கட்டத்தில் ஏற்பட்ட சரிவுக்கு கோவிட்-19 பெருந்தொற்றே காரணம்; அதன் போது நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் (MCO) பாதிக்கப்பட்ட முதலாளிகளுக்கு லெவி கட்டணம் செலுத்துவதில் இருந்து தற்காலிக விலக்கு வழங்கப்பட்டதை டத்தோ அபு ஹுராய்ரா சுட்டிக் காட்டினார்.
மனிதவள அமைச்சின் உத்தரவின்படி வர்த்தக நிர்வாக செயல்திறனை மேம்படுத்தும் நடவடிக்கைகளை இவ்வாண்டு அமுல்படுத்தியுள்ளோம்.
HRD Corp அல்லது அரசாங்கத்திற்கு எந்த செலவோ இழப்போ ஏற்படாத வண்ணம் திறன் கடப்பிழழ் (Skills Passport) திட்டத்தை ரத்து செய்வதும் அடங்கும் என்றார் அவர்.
HRD Corp நிதி முறையாகக் கையாளப்படவில்லை, நட்டத்தைக் கொண்டு வரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்தது போன்ற தவறுகளை, தேசியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையும், PAC அறிக்கையும் நேற்று சுட்டிக்காட்டியிருந்தன.