புத்ரா ஜெயா , மார்ச் 8 – வங்காளதேச தொழிலாளர்களை அழைத்துவர முகவர்கள் இனியும் தேவையில்லையென வங்காளதேச தொழிலாளர்களுக்கான விசாக்களை கையாள்வதில் ஈடுபட்டுள்ள மலேசிய விசா விண்ணப்ப நிறுவனங்களின் சேவைகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இ விசாவுக்கான விண்ணப்பங்களை இப்போது குடிநுழைவுத் துறையின் MyVisa அகப்பக்கம் மூலம் நேரடியாகச் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் Saifuddin Nasution Ismail தெரிவித்தார். வங்காளதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வேலைக்கு நியமிப்பது தொடர்பாக அரசாங்கம் செயலில் உள்ள ID க்கள் மற்றும் பயனர் கையேடுகளை முதலாளிகளுக்கு வழங்கியுள்ளது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மேலும் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் பயன்படுத்தப்படாமல் இருக்கும் வங்காளதேச தொழிலாளர் ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசாங்கத்தின் முடிவை Saifuddin ஆதரித்தார். விசா வழங்கப்பட்டவுடன், இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை மலேசியாவிற்குள் கொண்டுவர முதலாளிகளுக்கு மே 31 ஆம்தேதி வரை அவகாசம் உள்ளது. பொது அமைதி மற்றும் பாதுகாப்பை கருத்திற்கொண்டு தனது அமைச்சும் மற்றும் மனித வள அமைச்சும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார். ஒவ்வொரு துறையிலும் மனிதவளத்தின் தற்போதைய மற்றும் திட்டமிடப்பட்ட தேவையையும் இரு அமைச்சகங்கள் பரிசீலித்துள்ளன.