புத்ராஜெயா, ஜனவரி 31 – ஆட்கடத்தல் நடவடிக்கைக்கு இலக்கான தன்சானியா பெண் ஒருவரை, மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரிகள் பாதுகப்பாக மீட்டனர்.
தன்சானிய குடியரசின் உயர் ஆணையம் வழங்கிய தகவலின் அடிப்படையில், தலைநகரில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை வாயிலாக அந்த 29 வயது பெண் மீட்கப்பட்டதை, குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் டத்தோ ருஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.
வேலை வாங்கி தருவதாக கூறி, சக நாட்டு பெண் ஒருவரால் மலேசியாவிற்கு அழைத்து வரப்பட்ட அப்பெண், பின்னர் பாலியல் தொழிலாளியாக சேவை வழங்க கட்டாயப்படுத்தப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
அப்பெண்ணை நாட்டிற்கு அழைத்து வந்த 32 வயதான “மேடம்” என அழைக்கப்படும் சக நாட்டு பெண், மாணவர் அனுமதி விசாவை தவறாக பயன்படுத்தி அந்த இழிவான செயலில் ஈடுபட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ஆயுட்கால சிறைத் தண்டனையுடன், பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.