கோலாலம்பூர், டிச 1, பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் வான் சைபுல் வான் ஜானுக்கு எதிரான சட்டவிரோத பண பரிமாற்றம் மற்றும் ஜன விபாவா (Jana Wibawa) திட்டம் தொடர்பான லஞ்சக் குற்றச்சாட்டு கூட்டாக விசாரணை நடத்துவதற்கு செஷன்ஸ் நீதிமன்றம் இணக்கம் தெரிவித்துள்ளது. லஞ்சக் குற்றச்சாட்டுடன் சட்டவிரோத பரிமாற்ற குற்றச்சாட்டையும் கூட்டாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத் தரப்பு துணை வழக்கறிஞர் டி.பி.பி நீதிமன்றத்தில் முறையீடு செய்து கொண்டதைத் தொடர்ந்து செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி ரோசினா அயோப் இதனை ஏற்றுக் கொண்டார்.
டி.பி.யின் இந்த விண்ணப்பத்திற்கு வான் சைபுல் சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர்அமீர் ஹம்சா அர்ஷாத் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. இதற்கு முன் தாசெக் கெலுகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான வான் சைபுல் 5.59 மில்லியன் ரிங்கிட் சம்பந்தப்பட்ட சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான 18 குற்றச்சாட்டுக்கள் நீதிபதி சுசானா ஹுசின் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டது. 6.9 மில்லியன் லஞ்சம் கோரியது மற்றும் அதனை பெற்றதாகவும் நீதிபதி ரோஷினா முன்னிலையில் வான் சைபுல் குற்றஞ்சாட்டப்பட்டார்.